Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவனந்தபுரம்: திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஒன்பது, அலி என்று ஒரு காலத்தில் கேவலமாக பேசப்பட்டு வந்த திருநங்கைகள் தற்போது கொஞ்சம் நல் மதிப்பாக திருநங்கைகள் என சற்று மரியாதையுடன் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று ஒருவித பரிணாம வளர்ச்சிப் பெற்று திருநங்கை யர் என மதிக்கப்படுவதுடன், அவர்கள் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒருபடி மேலே போய் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருநங்கைகளுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். இது திருநங்கைகளே எதிர்பாராத ஒன்று.
அதாவது கேரளாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சத்தை கேரள அரசு உதவித்தொகையாக வழங்கும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பினராயி விஜயனின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக பினராயி விஜயனின் அரசு செயல்பட்டு வருகிறது.